அருங்காட்சியகம் - நாகர்கோயில்
பத்மநாபபுரம் பற்றிய கடந்த இடுகையில் சில படங்கள் விட்டுப்போயிற்று. அவைகளையும், அரண்மனையிலுள்ள அருங்காட்சியகத்தின் படங்களையும், தகவல்களையும் தந்திருக்கிறேன்.
அருங்காட்சியகம்: சிற்பக்கலையின் பழமையும், பெருமையும் காணக்கிடைக்கிற அருங்காட்சியகம். நிர்வகிப்பது கேரள அரசாங்கம். சோழர்களின் அளவிற்கு இல்லாவிட்டாலும் சிற்பங்கள் எளிமையால் கவர்கின்றன. கி.பி 10 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது சிற்பங்களின் வயது.
இங்குள்ள சேட்டை மற்றும் ஏழு கன்னியர் சிற்பங்கள் 10 ஆம் நூற்றாண்டு. சிற்ப வழிபாடு இங்கும் சிறப்பாக இருந்திருக்கிறது. கற்சிற்பங்கள் கி.பி 9 முதல் 18 ஆம் நூற்றாண்டையும், மரச்சிற்பங்கள் கி.பி 17 முதல் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
இருக்கும் சிற்பங்களில் குறிப்பிடத் தகுந்தவை: சேட்டை, திருமால், பிரம்மன், த்ட்சிணாமூர்த்தி மற்றும் பாலசுப்ரமணியன். கிராமதேவதை மற்றும் மரத்தால் ஆன கோயில் ரதம், வாசல்காப்போன் ஆகியவை. இவை கி.பி 9 ஆம் நூற்றாண்டு முதல் 18 வரை பல்வேறு காலத்தைச் சேர்ந்தவை.
ஓலைச்சுவடிகள், கேரள வரலாற்றை விவரிக்கும் ஓவியங்கள், பண்டைய நாணயங்கள், ஆயுதங்கள் ஆகியவை சிறப்பாகத் தொகுக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தொடாமல் பார்க்கும்வரை நமக்கும், கலைப்பொருட்களுக்கும் பாதிப்பில்லை !
மொத்தப் படங்களையும் எடுத்து முடிக்க 3 மணி நேரமாயிற்று.தூய்மையான அருங்காட்சியகம். சிறப்பாகப் பராமரிக்கும் கேரள அரசுக்கு நன்றியும், வாழ்த்துக்களும். செருப்பு வைக்கும் இடத்திலிருக்கும் குழந்தைத் தொழிலாளரை நீக்கினால் மகிழ்வேன். அவசரமாய்ச் செல்லாமல், நிதானமாய் வாழ்வின் அரைநாளைத் தியாகம் செய்து காண வேண்டிய இடம்.