சென்னை : ""டில்லியில் இரண்டு, மூன்று நாட்கள் தங்கியிருப்பேன். சி.பி.ஐ., விசாரணைக்கு ஒத்துழைப்பேன். சி.பி.ஐ., அதிகாரிகள் முன், நாளை ஆஜராவேன்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா தெரிவித்தார்.
தொலைத்தொடர்புத் துறையில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம் விட்டதில், மத்திய அரசுக்கு, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்பட்டதாக பிரச்னை எழுந்தது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை, பார்லிமென்டில் தொடர்ந்து எழுப்பி சபையை முடக்கின.இதற்கிடையில், அத்துறையின் அமைச்சராக இருந்த ராஜா, தன் பதவியை ராஜினாமா செய்தார். சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, நீதிபதிகள், சி.பி.ஐ., விசாரணையின் போக்கு குறித்து கேள்வி எழுப்பியதை அடுத்து, சி.பி.ஐ., தன் அதிரடி விசாரணையை துவக்கியது.
கடந்த வாரங்களில் தமிழகம், டில்லி உள்ளிட்ட இடங்களில், ராஜாவின் வீடு, அலுவலகம், தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் வீடுகள், புரோக்கர் நிரா ராடியாவின் அலுவலகம், ராஜாவின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.தொடர்ந்து, டில்லியில் சி.பி.ஐ., விசாரணைக்கு ஆஜராகும்படி, ராஜாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டது. ராஜாவிடம் விசாரணை நடத்த ஏதுவாக, புரோக்கர் நிரா ராடியாவிடம், தற்போது சி.பி.ஐ., விசாரணை நடத்தியுள்ளது. சுப்ரீம் கோர்ட், சி.பி.ஐ.,யின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் முகாமிட்டிருந்த ராஜா, சி.பி.ஐ., விசாரணைக்கு ஆஜராவதற்காக நேற்று டில்லி புறப்பட்டு சென்றார்.
விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்படுகையில் அவர் பேசும்போது, "நான் டில்லி செல்கிறேன். இரண்டு, மூன்று நாட்கள் அங்கு தங்கியிருப்பேன். சி.பி.ஐ., விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்' என்றார்.
சேப்பாக்கத்தில் இருந்து விமான நிலையம் சென்ற ராஜா, அங்கிருந்து மாலை 6:30 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் டில்லி புறப்பட்டு சென்றார்.
டில்லியில் நிருபர்களிடம் பேசிய அவர் கூறுகையில், ""சி.பி.ஐ., அதிகாரிகள் முன் நாளை (24ம் தேதி) ஆஜராகி, விசாரணையை எதிர்கொள்வேன். நாளை காலை 10 மணிக்கு ஆஜராக சி.பி.ஐ.,யிடம் அனுமதி கேட்டேன். அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்,'' என்றார்.
0 comments:
Post a Comment