புதுடில்லி: பகவான் சாய்பாபாவின் உடலை தரிசித்து இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜ., தலைவர் அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் இன்று புட்டபர்த்திக்கு வருகின்றனர். நேற்று கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வந்து அஞ்சலி செலுத்தினார்.
பகவான் சாய்பாபா நேற்று முன்தினம் ஸித்தியடைந்தார். அவரது உடல், புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தனக்கு நன்கு பரிச்சயமான சாய்பாபாவின் மறைவுக்காக வருத்தம் தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், புட்டபர்த்திக்கு நேரில் வந்து இன்று அஞ்சலி செலுத்துகிறார். பாரதிய ஜனதா தலைவர் அத்வானியும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் இன்று புட்டபர்த்திக்கு வருகின்றனர். பாபாவின் உடல் சமாதியில் அடக்கம் செய்யப்படும் வரை அத்வானி, பிரசாந்தி நிலையத்தில் தங்கியிருப்பார் என பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ராகுல் இரங்கல்: காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ராகுல் குறிப்பிடுகையில், "உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியவர் சாய்பாபா. கல்வி, சுகாதாரம் போன்றவற்றுக்காக அவர் ஆற்றிய சேவை அளவிடற்கரியது. அன்பு என்னும் மதத்தைப் போதித்தவர் அவர். அன்பு மற்றும் சேவை மூலம் இளைஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் பாபா' என்றார். நேபாள பிரதமர் ஜலநாத் கனல் குறிப்பிடுகையில், "உலக மக்களுக்கு அன்பை போதித்து வந்த ஆசான் பாபா. அவரது பிரிவால் வருந்துகிறேன்' என்றார்.
கதறி அழுதார் சச்சின்: சாய்பாபாவின் தீவிர பக்தரான கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தனது பிறந்த நாளை நேற்று முன்தினம் கொண்டாடவில்லை. புட்டபர்த்திக்கு நேற்று வந்த சச்சின், பிரசாந்தி நிலையத்தின் சாய் குல்வந்த் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த பாபாவின் உடலைக் கண்டு கதறி அழுதார். அவருடன் அவரது மனைவி அஞ்சலியும் வந்திருந்தார். ஒரு மணி நேரம் பாபாவின் உடல் அருகே அமர்ந்திருந்த சச்சினுக்கு, பாபா அறக்கட்டளை நிர்வாகிகள் ஆறுதல் கூறினர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கரும், அவரது மனைவியும் பாபாவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பாபாவை போற்றி பாடி வந்த பிரபல பின்னணி பாடகி சுசிலாவும், பழம் பெரும் நடிகை அஞ்சலியும், பாபாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
ஸ்தம்பித்தது புட்டபர்த்தி: லட்சக்கணக்கான பக்தர்கள் புட்டபர்த்திக்கு வந்த வண்ணம் இருப்பதால், பிரசாந்தி நிலையத்தின் அருகே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தடுப்புகள் அமைக்கப்பட்டு, பக்தர்கள் வரிசையில் நின்றபடி பிரசாந்தி நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்களின் வசதிக்காக ஆந்திராவின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான பஸ்களும், நான்கு கூடுதல் ரயில்களும் விடப்பட்டுள்ளன. பாபாவின் மறைவையொட்டி இப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், உணவுப் பொருட்கள் கிடைக்காமல் பக்தர்கள் அவதிக்குள்ளாயினர். ஆனால், சாய்பாபா அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு உணவு, மோர் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றன. பக்தர்களின் வசதிக்காக கடைகளை திறக்கும்படி, மாநில அரசின் சார்பில் கோரப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி வரை பக்தர்கள், பாபாவின் உடலை தரிசிக்க அனுமதிக்கப்படுவர் என, மாநில அமைச்சர் கீதா ரெட்டி தெரிவித்துள்ளார். இலங்கையில் சாய்பாபா பக்தர்கள் அதிகம் உள்ளதால், அவர்களின் வசதிக்காக இலங்கை அரசு, கூடுதல் விமானங்களை பெங்களூருக்கு இன்று முதல் இயக்க உள்ளது. இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்டோர், பாபாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த யோகா குரு பாபா ராம்தேவ் குறிப்பிடுகையில், "சாய்பாபா அறக்கட்டளை பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளைக் கொண்டது. நல்ல முறையில் இயங்கி வரும் இந்த அறக்கட்டளையை தற்போதுள்ள அறங்காவலர்களிடமே ஒப்படைக்க வேண்டும். இந்த விஷயத்தில் அரசு தலையிடக்கூடாது' என்றார்.
0 comments:
Post a Comment